சிறிலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளருக்கு ஊடகச் சந்திப்புகளுக்கு தடை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விடுத்துள்ள விசேட கட்டளையின் கீழ், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

“இராணுவ அதிகாரி ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும், இராணுவ அதிகாரிகள் சகலரையும் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவேண்டும் என்பதே இராணுவத் தளபதியின் நிலைப்பாடாகும்” அந்த வகையில், சில விடயங்கள் தொடர்பில், இராணுவம் பதிலளிக்கவேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.