சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான்! -கிருத்திகா உதயநிதி

‘என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான்’ எனத் தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி.

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அவருடைய இரண்டாவது படம் ‘காளி’ சமீபத்தில் வெளியானது. இயக்குநராக இருந்தாலும், திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளமும் அவருக்கு இருக்கிறது. அவருடைய கணவரான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர், ஹீரோவாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மேடைகளில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார்.

‘அரசியலில் எந்த அளவுக்கு உங்கள் கணவருக்கு உதவியாக இருப்பீர்கள்?’ என்று கிருத்திகாவிடம் கேட்ட போது  “நான் அவருக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி, அவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுதான். அந்த உதவியைத்தான் அவரும் எனக்குச் செய்கிறார். அவரவருக்கு என்ன விருப்பமோ, அவங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ… அதைத் தொடரலாம். அரசியலும் சரி, சினிமாவும் சரி… எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எதை ஒதுக்கிறார்கள் என்பது மக்கள் கையில் இருக்கிறது. முயற்சி செய்ய விரும்புகிற எல்லோரும் முயற்சி செய்யலாம்” என்றார்.

‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்தது. உங்கள் குடும்பமே அதற்கு உதாரணம். உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா?’ என்று கேட்ட போது “என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான். எனக்கு சினிமா மட்டும் தான்” என்று பதில் அளித்துள்ளார் கிருத்திகா உதயநிதி.