சிந்துதாய்! பெயரிலேயே தாய் கொண்டுள்ள இவர் நிஜமாகவே உலக தாய்!

இன்று இரண்டு குழந்தை பெற்று வளர்க்க கஷ்டப்பட்டுக்கொண்டு ஒன்றோடு நிறுத்திக் கொள்கிறார்கள் நவநாகரீக பெற்றோர். அதிகரித்து வரும் இந்திய மக்கள் தொகையை கட்டுப்படுத்த இதுவொரு நல்ல வழி தான் என்றாலும். மறுபுறம் இரண்டு குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்குவது என்பது இன்றைய பொருளாதார சூழலில் மிகவும் கடினம் என்றும் பலர் கருதுகிறார்கள்.

இன்றைய சூழலில் எல்.கே.ஜி சேர்கவே ஓரிரு இலட்சங்கள் செலவு ஆகிறது. ஆனால், நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளை ஒற்றை பெண்மணியாக நின்று பிச்சை எடுத்து வளர்த்து அவர்களை பெரிய ஆட்களாக ஆளாக்கி அழகு பார்த்து. இன்று உலகமே இப்படியும் ஒரு பெண்ணால் வாழ முடியுமா என்று வியக்கவைத்துள்ளார் சிந்துதாய்.

பெயரிலேயே தாய் கொண்டுள்ள இவர், நிஜமாகவே உலகின் சூப்பர் மதர் தான்.

சிந்துதாய்!

சிந்துதாய் 1948 நவம்பர் 14ல் (குழந்தைகள் தினத்தில்) மகாராஸ்டிராவின் வரதா எனும் நகரில் இருக்கும் பிம்ப்ரி மேகே எனும் கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை மாடு மேய்க்கும் வேலை செய்து வந்தவர். சிந்து தாயை இவரது அம்மா எப்போதுமே உபயோகம் இல்லாத கிழிந்த துணிக்கு சமம் என்று திட்டுவார். அவரை பொறுத்தவரை சிந்துதாய் வேண்டாத குழந்தை. சிந்துதாயின் அம்மாவின் திட்டுகளை எதிர்த்து, இவரை படிக்க வைப்பதில் கவனமாக இருந்தார் இவரது தந்தை.

வறுமை!

ஸ்லேட்டு வாங்கக் கூட வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்து, பாரதி மரத்தின் (Bharadi Tree) இலைகளில் எழுதி பழகி படித்தவர் சிந்துதாய். குடும்பத்தின் வறுமை மற்றும் கடமைகள் காரணமாக பத்து வயதிலேயே நான்காம் வகுப்பு முடித்த சமயத்தில் இவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சிந்துதாய் வசித்து வந்த கிராமத்தின் அருகே இருந்த நவர்கோன் எனும் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஹரி என்கிற ஹர்பாஜி எனும் 30 வயது மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்த ஆணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபது வயதுக்குள் மூன்று குழந்தைகள் பெற்றார்.

கிளர்ச்சி!

தனது கணவன் ஊரில் தவறு செய்து வந்த ஒரு நபரை எதிர்த்து கிளர்ச்சி ஏற்படுத்தினார் சிந்துதாய். அந்த நபர் கிராம மக்களிடம் இருந்து மிரட்டி வரட்டிகளை இலவசமாக பெற்றி அதை வனத்துறையினருக்கு எரிவாயுவாக பயன்படுத்த விற்று பணம் பார்த்து வந்தார். இதற்கு எதிராக கிளர்ச்சி உண்டாக்கி மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று கிராம மக்களுக்கு சாதகமாக தீர்ப்பும் பெற்றார் சிந்துதாய். இதனால் கோபமடைந்த அந்த நபர் சிந்துதாயின் கணவரை தன் பக்கம் இழுத்து, ஒன்பது மாத கர்பிணியாக இருந்த சிந்துதாயை வீட்டை விட்டு விரட்டி அடிக்க செய்தான்.

பிரசவம்!

அந்த ஓட்டில் இருந்த ஒரு மாட்டு கொட்டகையில் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்டார் சிந்துதாய். தொப்புள்கொடியை தன் அருகே இருந்த ஒரு கூர்மையான கல்லை கொண்டு அறுத்து தான் பிரசவம் பார்த்த நிகழ்வை அவரே பகிர்ந்திருக்கிறார். பச்சிளம் குழந்தையுடன் தனது அம்மாவின் ஊருக்கு நடந்தே சென்றுள்ளார் சிந்துதாய். ஆனால், பிறந்ததில் இருந்தே இவரை பிடிக்காத தாய், சிந்துதாய்க்கு தங்க இடமில்லை என்று கூறி அனுப்பிவிட்டார். ஏறத்தாழ தற்கொலை தான் ஒரே தீர்வு என நினைத்த சிந்துதாய்., ரயில் நிலையத்தில் உணவுக்காக பிச்சை எடுக்க துவங்கினார்.

ஆதரவற்ற குழந்தைகள்!

முதலில் தனது குழந்தைகளுக்காக பிச்சை எடுக்க துவங்கிய சிந்துதாய், ரயில் நிலையத்தில் நிறைய ஆதரவற்ற குழந்தைகள் இருப்பதை கண்டார். அவர்களை எல்லாம் தானே தத்தெடுத்து வளர்க்க துவங்கினார். அனைவருக்கும் உணவளிக்க நிறைய பிச்சை எடுத்தார். இனிமேல், ஆதரவற்ற குழந்தைகள் அனைவருக்கும் தானே தாயாக முடிவு செய்தார். தான் பெற்ற ஒரு குழந்தையை ஸ்ரீமந் டக்டு ஷேத் ஹல்வாய் என்ற டிரஸ்ட்க்கு தானமாக கொடுத்தார். இதன் மூலமாக தான் பெற்ற குழந்தைகள் மற்றும் தத்தெடுத்த குழந்தைகள் மீது பாகுபாடு இல்லாமல் இருக்க இயலும் என்று கருதினார். அவ்வாறே விளங்கினார் சிந்துதாய்.

அம்மா!

தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அர்பணித்துக் கொண்டார் சிந்துதாய். இவர் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இன்று இவருக்கு 207 மருமகன்கள், 36 மருமகளால் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். இன்றளவிலும் தான் வளர்த்து வரும் குழந்தைகளின் அடுத்த வேலை உணவுக்காக போராடி தான் வருகிறார் சிந்துதாய்.

 

அறிவாளிகள்!

தான் வளர்த்த குழந்தைகளை வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக உருவாக்கியுள்ளார் சிந்துதாய். இவருக்கு பிறந்த மகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் வளர்த்த குழந்தை ஒருவர் இவரது வாழ்க்கை குறித்தே பிஎஹ்டி படித்து வருகிறார். இதுவரை சிந்துதாய் 273க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியுலாளர். விருதுகளுடன் சேர்த்து கொடுக்கப்படும் பணத்தை கொண்டு தான் வளர்க்கும் குழந்தைகளுக்கான வீடுகள் கட்டிவருகிறார் சிந்துதாய்.

கணவர்!

இவரது கணவர் தனது 80வயது வயதில் மீண்டும் இவரை தேடி வந்தார். தான் செய்த தவறை எண்ணி வருந்தி மன்னிப்புக் கோட்டார். தான் தத்தெடுத்து வளர்க்கும் மற்ற குழந்தைகளை போலவே, அவரையும் தத்தெடுத்துக் கொண்டார் சிந்துதாய். மற்றவர்களிடம் தனது கணவரை கணவராக இன்றி, தனது வீட்டில் இருக்கும் வயதான மூத்த குழந்தையாகவே அறிமுகம் செய்கிறார் சிந்துதாய். 2010ல் சிந்துதாய் பற்றிய திரைப்படம் ஒன்று வெளியானது. இந்த படம் லண்டன் திரை விழாவில் திரையிடப்பட்டது. சிந்துதாய் இதுவரை 84 கிராமங்களின் புனர்வாழ்வுக்காக போராடியுள்ளார்.