சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு, 13,314 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 5 பேர் சீரற்ற காலநிலையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறி தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதேவேளை, சில மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும், தெதுரு ஓய மற்றும் உடவல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை அடுத்து வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.