522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கமாம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு சிறிலங்கா  இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப்பட உள்ளது.

அவற்றை ஸ்தாபிப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாயை சிறிலங்கா  இராணுவத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.