அவுஸ்ரேலியாவில் வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம்!

அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் முதல்தடவையாக வரதட்சணைக் கொடுமைக்கெதிரான சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்தியப் பின்னணி கொண்ட பல ஆண்கள் வரதட்சணை பெற்று திருமணம் செய்கின்றனர்.

பின் இங்கே தமது மனைவியை அழைத்து வந்து நிர்கதிக்கு உள்ளாக்கி விடுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்தவிடயம் தொடர்பாக ரோயல் கமிஷன் விசாரணையின் அடிப்படையில், புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விக்டோரிய மாநில பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் Robin Scott தெரிவித்தார்.

இதேவேளை வரதட்சணை விவகாரம் குடும்ப வன்முறையின் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டு இதற்கான புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்டோரியா மாநில அரசின் அதிரடி முடிவினை பல சமூக அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. இந்நிலையில் விக்டோரியா மாநிலத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்படுமாயின் இந்தியாவிற்கு வெளியே, வரதட்சணை விவகாரத்தில் சட்டம் கொண்டுவந்த முதல் நாடு என்ற பெயரினை அவுஸ்ரேலியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.