மீண்டும் நாயகனாக நடிக்கிறார் ராம்கி!

சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் நாயகனாக( ஹீரோவாக )அறிமுகமானவர் ராம்கி. அதன் பிறகு தங்கச்சி, செந்தூரப்பூவே, பார்வைகள் பலவிதம், இரண்டில் ஒன்று, இது எங்க நீதி, மனைவி ஒரு மந்திரி, ஒரு தொட்டில் சபதம், இணைந்த கைகள் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ராம்கி, மாசானி என்ற படத்தின் மூலம் மீளவும் வந்தார்.

அதன்பிறகு குணசித்ர நடிகராக பிரியாணி, வாய்மை, அட்டி படங்களில் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கிலீஸ் படம் என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். சஞ்சீவ், மீனாட்சி உள்பட பலர் நடித்துள்ளனர். குமரேஷ் குமார் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது:

இத்திரைப்படத்திற்கு இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும். இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி, வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார்.

அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்பட, அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால் வீட்டை வாங்கி கொள்வதாக சொல்கிறார். எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்க அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு யாரும் எதிர்பாராத விதமாக ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது.

அதன்பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக உருவாக்கி உள்ளோம். இப்படம் ராம்கியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும். இதுவரை பார்க்காத ராம்கியை திரையில் காண முடியும். வருகிற அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது என்கிறார் குமரேஷ் குமார்