அவுஸ்ரேலிய அணியில் பல சிறப்பான வீரர்களும் உள்ளனர்!

இந்தியாவிற்கு எதிராக விளையாடும் அவுஸ்ரேலியா அணி ‘ஒன் மேன் ஆர்மி அல்ல’. பல சிறப்பான வீரர்களும் உள்ளனர் என ஆல்ரவுண்டர் ட்ராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.

இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இடையில் இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த தொடர் குறித்துதான் எங்கும் பேச்சாக உள்ளது.

விராட் கோலியை ஆஸி. வீரர்கள் எப்படி கட்டுப்படுத்துவார்கள்? அணியில் யார் யாருக்கு இடம்? ஸ்மித், வார்னர் அதிக ரன்கள் குவிப்பார்களா? அணி எவ்வளவு ஸ்கோர் அடிக்கும்? என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவுஸ்ரேலியா அணி ஒன் மேன் ஆர்மி அல்ல. இந்த எண்ணத்துடன் இந்தியாவிற்கு எதிராக களம் இறங்கமாட்டோம் என அந்த அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர் ட்ராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவிற்கு எதிரான தொடர் குறித்து ட்ராவிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய சிறந்த வீரர்களை பெற்றுள்ளோம். ஸ்டாய்னிஸ் மிகவும் சிறந்த வகையில் பேட்டிங் செய்கிறார். பால்க்னெர் சிறப்பாக பந்து வீசியவர். நாங்கள் ஒரு வீரரை மட்டும் நம்பி களம் இறங்கமாட்டோம்’’ என்றார்.

சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் 4-வது வீரராக களமிறங்கி 65 ரன்கள் குவித்த ட்ராவிஸ், ஐ.பி.எல். தொடரிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.