அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா வெல்லும்: கங்குலி

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சவுரவ் கங்குலி நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உள்ளூரில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா கைப்பற்றும். ஆனால் இலங்கைக்கு எதிராக செய்தது போன்று 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வெல்வதற்குரிய வாய்ப்பு குறைவே. ஏனெனில் அவுஸ்ரேலியா வலுவான அணி. நமது தேர்வாளர்கள் இளம் வீரர்களின் திறமையை பரிசோதிக்க விரும்புகிறார்கள்.

2019-ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு தேர்வாளர்கள் மேற்கொள்ளும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. உலக கோப்பைக்கு தயாராவதற்கு போதுமான காலஅவகாசம் உள்ளது. அணியை வலுப்படுத்த ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுப்பது அவசியமாகும்.’ என்றார்.