கணைய புற்றுநோயை கணிக்கும் செயலி!

லட்சத்தில், 12 பேருக்கு வர வாய்ப்புள்ள கணைய புற்றுநோயை, துவக்க நிலையிலேயே கண்டறிவது கடினம். இன்சுலின் திரவத்தை சுரந்து, உடலில் சர்க்கரையை செரிக்க உதவும் கணையத்தில், புற்றுநோயின் துவக்க அறிகுறிகள், கண்களின் திசுக்களில் தெரிய வாய்ப்புகள் அதிகம். இதை வைத்து, ஒரு புதிய கணைய புற்றுநோயை கண்டறியும் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர், வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,

விஞ்ஞானி சுவேதக் படேல் மற்றும் குழுவினர். கணைய புற்றுநோய் இருப்பவர்களின் ரத்தத்தில், ‘பிலிருபின்’ என்ற வேதிப் பொருள் இருக்கும். காமாலை போலவே, இதுவும் துவக்க கட்டத்தில் கண்களில் பாதிப்பை காட்டும்.

நோயாளிகள், இந்த செயலியை, தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து, கண்களுக்கு அருகே வைத்து, ‘க்ளிக்’ செய்தால் போதும். அந்த செயலி, செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் உதவியுடன், கண்களின் தோற்றத்தை அலசி, கணைய புற்றுநோய் அறிகுறி உள்ளதா, இல்லையா என்பதை தெரிவிக்கும்.

‘செல்பி எடுப்பதை போன்றது தான், இந்த எளிய சோதனையும்’ என்கிறார். படேல்.துவக்க நிலையில், கணைய புற்றுநோயை கண்டறிய, இந்த செயலி உதவும் என்பதால், அதை நடைமுறைக்கு கொண்டு வர, விஞ்ஞானிகள் சோதனைகளை வேகப்படுத்தி உள்ளனர்.