அவுஸ்ரேலியாவில் விமானப்பயணிகள் மீதான சோதனைகள் தீவிரம்!

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் விமானங்களை தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதை தொடர்ந்து விமானப்பயணிகளை சோதனையிடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக சிட்னி மற்றும் மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரும் தாமதம் நிலவுவதுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

சிட்னி விமானநிலையத்தில் மிக நீண்ட வரிசையில் பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொள்வதற்காக காத்திருக்கின்றனர்.

மெல்பேர்ன் விமான நிலையத்திலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்-மேலும் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகளவு நடமாட்டத்தையும் காண முடிகின்றது.

உள்ளுர் விமானசேவைகளை பயன்படுத்துபவர்களை இரண்டு மணித்தியாலம் முன்னதாக வருமாறும்  இதன் மூலம் தாமதங்களை தவிர்க்கலாம் எனவும்  அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை உள்ளுர் விமானசேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் அடையாள அட்டைகளை சோதனையிட வேண்டும் எனவும்   விமானத்திற்குள் நுழைபவர் யார் என்பதை அறிவது அர்த்தமுள்ள விடயமாக காணப்படும் எனவும் தொழிற்கட்சியின் தலைவர் பில் சோர்ட்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதேவேளை நீதியமைச்சர் மைக்கல் கீனன் இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை உறுதிசெய்துள்ளார்

இதனை தான் தற்போது ஏற்றுக்கொள்ளப்போவதோ நிராகரிக்கப்போவதோயில்லை ஆனால் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றால் இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.