`சங்கமித்ரா’ பிரம்மாண்ட படத்தில் சத்யராஜ்?

`பாகுபலி’ படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி’-2. வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்நிலையில், `பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சத்யராஜ், மற்றுமொரு வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறாராம். சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் வேலைகள் ஐதராபாத்திரத்தில் தொடங்கிவிட்டதாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் அதிதி ரவீந்திரநாத் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சுந்தர்.சி. இயக்கவிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். நடிகை சுருதி ஹாசன் விலகியதால் அவருக்கு பதிலாக அனுஷ்கா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் 100-வது படமாக உருவாகியிருக்கும் விஜய்யின் `மெர்சல்’ வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.