குழு சண்டையில் தயவு செய்து தமிழர் நிவாரணத்தை பலிக்கடா ஆக்காதீர்கள்!

சமீபகாலமாக தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள அவலங்கள் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிகபட்ச மனஉலைச்சலை ஏற்படுத்தியுள்ளதுஎன்பதே உண்மை. ஒரு மோசமான இன அழிப்பிற்குள்ளான ஈழத்தமிழினத்திற்கு உதவும் கரங்களாக நின்று அவர்களை வாழ்வில் உயர்த்திவிட வேண்டிய கடமைபாடுடைய நாம் அதை மறந்து நான் பெரிதா நீ பெரிதா என்ற குழு சண்டைக்குள் எம்மை உட்படுத்தியிருப்பது பெரும் துயர்தருகிறது.

இதில் ஒரு தரப்பை தாக்குவதற்கு தமிழர் புனர்வாழ்வு சார்ந்த விடயங்களையே வீதிக்கு இழுத்து உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது. பிரம்டன் தமிழ் ஒன்றியத்தினராகிய நாமும் முன்னெடுத்த உயரிய புனர்வாழ்வு செயற்பாடு ஒன்றும் இவ்வாறே மலினப்படுத்தப்படுகிறது.

தாயகத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு கழுத்திற்கு கீழே மற்றும் இடுப்பிற்கு கீழே இயக்கமற்றவர்களின் முன்னாள் போராளிகளின் நலனை கவனிக்கும் அவர்களாலேயே இயக்கப்படும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் அமைப்பிற்கான நிர்வாக மற்றும் தொழில்பயிற்சிக்கூடத்திற்கான கட்டிடத்தை மாங்குளத்தில் கட்டிக்கொடுப்பதற்கான பொறுப்பை நாம் ஏற்றோம்.

அதை குறுகிய காலத்தில் செய்து முடித்து பாவனைக்கும் உத்தியோக பூர்வமாக அக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு பாவனையிலும் தற்போது உள்ளது. ஏ9 வீதிக்கு அருகில் மாங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள இக்கட்டிடத்தை கனடாவில் இருந்து தாயகம் சென்று வரும் பலரும் பார்வையிட்டு தம்மால் ஆன உதவிகளையும் செய்துவிட்டு வருகின்றனர் என தொடர்ந்து வரும் செய்திகள் பெருமகிழ்ச்சி தருகிறது.

இக்கட்டிடத்தை சிறீலங்காவிற்கான கனடிய தூதுவர் சென்று நேரடியாக பார்வையிட்டுள்ளதுடன் திறப்பு விழாவில் முதலமைச்சருடைய பிரதிநிதி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாந்தி சிறீஸ்கந்தராஐh உட்பட வடமாகாண அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வை எம் கனடிய தமிழ் உறவுகளுக்காக நேரலையாகவும் நாம் எடுத்து வந்திருந்தோம்.

இவ்வளவிற்கும் பின்னும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் கனடாவில் கையளிக்கப்பட்ட பணம் கணக்கில் வரவில்லை என செய்தி வெளியிட்டு அவர் பிராம்டன் நகரசபைக்கு வந்த போது எம்முடன் எடுத்த படத்தை வெளியிட்டு கலகம் விளைவிக்க சிலர் முயன்றுள்ளமையும் அதனை சில ஊடகங்களும் செய்தியாக்கியமையும் அதிர்ச்சி தருகிறது. அதேவேளை கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் என தம்மை அழைத்துக் கொள்ளும் சிலரும் இதன் பின்னணியில் இருப்பதும் அதீத கவலை தருகிறது. தமிழ் அரசியலில் நீங்கள் இன்று நடத்தும் குழு சண்டையில் தயவு செய்து தமிழர் நிவாரணத்தை பலிக்கடா ஆக்காதீர்கள் என வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

உங்கள் இவ்வாறான தவறான செயற்பாடுகள் மக்கள் நிவாரணங்கள் குறித்த அவநம்பிக்கையை எம் கனடிய தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி நிவாரணம் வேண்டி நிற்கும் எம் தாயக மக்கள் வாழ்வில் நிரந்தர துன்பத்தை ஏற்படுத்திவிடும். தமிழ் ஊடக உறவுகளுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள் இவ்வாறான தவறான முயற்சிகளுக்கு எதிர்காலத்தில் துணைபோகாதீர்கள். குழுச்சண்டைகளை நிராகரித்து ஆரோக்கியமான தமிழர் சமூகத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போமென பிராம்டன் தமிழ் ஒன்றியம் உரிமையுடன்; அனைவரையும் அழைக்கிறது. இவ்வன்பு வேண்டுகோள் தொடர்ந்தும் புறந்தள்ளபடுமானால் நாம் உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுவோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.