மே18 – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 08ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

• கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் மாணிக்கபுரம் வாவிக் கரையில். (வாகரை வைத்தியசாலைக்கு அண்மையில் மட்டு-திருகோணமலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

• வடக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற்கரையில் (ஏ32வீதியில் 46வது கிலோ மீற்றர் கல்லிலிருந்து புனித சின்னப்பர் ஆலய வீதி) பி.ப 2.30 மணிக்கு நடைபெறும்.

மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் 18.05.2017 ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பொது அமைப்புக்களும் இணைந்த வகையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன அழிப்பு ஒன்றின் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாளான மே 18 என்பது தமிழரது சரித்திரத்தில் மறக்க முடியாத கறைபடிந்த நாளாகும். அந்நாள் தமிழினம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனவழிப்பு தினமாகும்.

தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்கான உரிமை எமக்குள்ளது.

இறந்தவர்களது ஆத்ம சாந்திக்காக முள்ளிவாய்க்கா லில் உயிர்நீத்த எம் உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியான வழியில் அனைவரையும் கடைப்பிடிக்குமாறு கோருவதுடன், வாகரையில் காலை 9.30 மணிக்கு இடம்பெறும் நிகழ்விலும், முள்ளிவாய்க்காலில் பி.ப 2.30 மணிக்கு இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுமாறும்  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கேட்டுள்ளனர்.