போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கு மேலும் பதவியுயர்வு!

போர்க்குற்றச்சாட்டுக்களினை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத்தின் கஜபா காலாட்படைப் பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படவுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா இந்தவாரம் ஓய்வு பெறவுள்ளார்.இவரது வதிவிடத்தினில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையினில் மரணித்தமை தொடர்பினில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையினில் ஒய்வு முடிவுக்கு அவர் வந்துள்ளார்.

இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் புதிய தலைமை கட்டளை அதிகாரி பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்று மனித உரிமை அமைப்புகளால் குற்றம்சாட்டப்பட்டு வருபவராவார்.

அண்மையில் சிறிலங்கா இராணுவத் தளபதியின் பொது உதவி அதிகாரியாக அவருக்கு நியமனம் வழங்கப்பட்டமையானது, அனைத்துலக மட்டத்தில் கடுமையான சர்ச்சைகளையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு மற்றொரு உயர்பதவி வழங்கப்பட்டுள்ளது.