உனக்கு ஏன் இந்த வேலை? கார்த்தியை கேட்ட வெள்ளைக்கார நண்பர்கள்

நான் சினிமாவுக்கு செல்கிறேன் என்றபோது, எனது வெள்ளைக்கார நண்பர்கள் கூட ’உனக்கு ஏன் இந்த வேலை’ என்றுதான் கேட்டார்கள் என நடிகர் கார்த்தி கூறினார்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி நடித்துள்ள படம், ‘காற்றுவெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டில் பேசிய கார்த்தி, ’நான் மணிரத்னம் சாரிடம் ஜூனியர் மோஸ்ட் உதவி இயக்குநராக இருந்து ஹீரோவாகிவிட்டேன். எனக்கு இது ஒரு கனவு படம் என்றால் அது பொய்யாக இருக்கும். ஏனென்றால் எனக்கு இப்படி ஒரு நல்ல கனவு வந்ததே இல்லை.

நான் அமெரிக்காவில் படித்துவிட்டு சினிமாவுக்கு செல்கிறேன் என்றதும் எல்லோரும் சொன்னது, உனக்கு ஏன் இந்த வேலை என்றுதான். பொறியியல் படித்துவிட்டு ஏன் சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்று என்னுடைய வெள்ளைக்கார நண்பர்கள் கூட கேட்டார்கள்.

நான் மணி சாரிடம் சினிமாவை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் வேலையில் சின்சியராக உள்ளதற்கு மணி சாரிடம் வேலை செய்ததுதான் காரணம். இந்த படத்தில் நடிப்பதற்காக நான் மீசையை எடுத்த கதை பற்றி ஒரு புக்கே போடலாம். இந்த படத்தில் பைலட்டாக வருகிறேன். ஆழமான எமோஷனல் காதல் கதை’ என்றார் கார்த்தி.