“எனக்கு அம்மாவாக வந்தவள் ஆனந்தி..!” – அஜய்

சின்னத்திரையில் ‘கனா காணும் காலங்கள்’, ‘ஜோடி நம்பர் ஒன்’, ‘கிச்சன் சூப்பர்ஸ்டார்’ என்று கலக்கிக் கொண்டிருந்த ஆனந்தி, ‘வாலு’, ‘மீகாமன்’, ‘தாரை தப்பட்டை’, ‘பறந்து செல்ல வா’ என வெள்ளித்திரையிலும் காலூற்றி நின்றிருக்கிறார். இந்த நிலையில், திடீர் என தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் ஆனந்தி. ‘என்ன திடீர்னு கல்யாணம் பண்ணிட்டீங்க..?’ என்று ஆனந்தியை கேட்டபோது…

“கொஞ்ச நாளாகவே வீட்டுல வரன் பார்த்திட்டு இருந்தாங்க. என்னைத் தேடி ஒரு நல்ல வரன் வந்தது. நான் அவரையே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். உடனே நிச்சயதார்த்தம் பண்ணிக்கிட்டோம். மார்ச் 2-ம் தேதி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்றவரிடம், ‘அப்போ இது காதல் கல்யாணம் இல்லையா..?‘ என்று அதிர்ச்சியாக கேட்டோம்.

“காதல் கல்யாணம் இல்லைங்க. ஆனால், நிச்சயதார்த்தத்திற்கு அப்பறம் கல்யாணத்துக்கு ஒரு மாதம் இடைவெளி இருந்தது. அந்த நாட்களில் தான் லவ் பண்ணிட்டு இருந்தோம்” என்றவர், அவரது கணவரைப் பற்றி சொல்கிறார்.

“என்னோட கணவர் அஜய், பிசினஸ் பண்றார். நான் கோயம்புத்தூர் பொண்ணு, அவருக்கு சென்னை தான் சொந்த ஊர். நிச்சயதார்த்தம் நடந்ததில் இருந்து நாங்க அப்போ அப்போ மீட் பண்ணிக்குவோம். அப்போவே என்னை ரொம்ப நல்லா பாத்துக்குவார். கல்யாணத்துக்கு அப்பறம் சொல்லவா வேணும். என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குறார். நான் ஏதாவது ஒரு விஷயத்துக்காக கோவப்பட்டேன்னா அதை அவர் அடுத்து பண்ணவே மாட்டார். என்னை நல்லா பாத்துக்கிறார். நான் ரொம்ப ஆனந்தமா இருக்கேன்” என்று நெகிழ்ந்த ஆனந்தி, தொடர்ந்தார்.

“கல்யாணத்தை ரொம்ப சிம்பிளா ஆந்திராவுல நடத்தினோம். அதுனால, செலிபிரிட்டிகளை கூப்பிட முடியலை. சென்னையில் ரிசப்ஷன் நடத்தினோம். அதுக்கு செலிபிரிட்டிகள் பலரும் வந்தாங்க. அடுத்த வாரம் கோயம்புத்தூரில் இன்னொரு ரிசப்ஷன் நடத்தப்போறோம். இப்படி ஒரு மாசம் முழுவதும் கல்யாண மோடில் தான் இருக்கோம்” என்றவரிடம், ‘முதல் சண்டை நடந்து சமாதானம் ஆகிட்டிங்களா..?’ என்று கேட்டோம்.

“சண்டையா… இவர்கிட்டயா… போங்க பாஸ். சண்டையே போடமாட்டார். நானாவே அவர்கிட்ட சண்டை போடணும்னு பேசுனாலும், அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிடுவார். போன்ல பேசும் போது நான் கோவப்பட்டு கத்துனேன்னா, ‘நான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன்’னு போன்னை வச்சிடுவார். அதுக்குஅப்பறம் அவரே போன் பண்ணி, எதுவுமே நடக்காத மாதிரி பேசுவார். ஏன்,என்கூட சண்டையே போட மாட்றீங்கனு கேட்டதுக்கு, ‘நீ கோவமா பேசும் போது நானும் கோவமா பேசுனா, அதுனால உன் மனசு கஷ்டப்படும். எதுக்கு அப்படியெல்லாம் ஆகணும். அதுக்காக தான் சண்டையை அவாய்ட் பண்றேன்’னு சொன்னார். என்னை இவ்வளவு அன்பா பார்த்துக்கிறவர்கிட்ட சும்மாக்கூட சண்டை போட மனசு வரல” என்று ஆனந்த கண்ணீர் விட்ட ஆனந்தியிடம் இருந்து போனை வாங்கிய அஜய், பேசத் தொடங்கினார்.

“நான் எப்படி அவங்களை உள்ளங்ககையில் வச்சு தாங்குறேன்னு ஆனந்தி சொல்றாங்களோ, அதே மாதிரி அவங்க என்னை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குறாங்கனு நான் சொல்லுவேன். கல்யாணம் ஆனதில் இருந்து ஷூட்டிங்கில் கொஞ்சம் பிஸியாக இருந்தாலும் எனக்கான தேவைகளை அவங்க ரொம்ப பார்த்து பார்த்து செய்றாங்க. எனக்கு அம்மா இல்ல. கல்யாணத்துக்கு அப்பறம், எனக்கு அம்மாவா ஆனந்தி வந்திருக்காங்க. சமையல்ல ஆனந்தி கில்லாடி. அவங்க செய்ற ட்ராகன் சிக்கனுக்கு நான் அடிமை” என்றவரிடம், ‘சினிமா பிரபலத்தை கல்யாணம் பண்ணினது எப்படியிருக்கு..?’ என்று கேட்டோம்.

“மத்தவங்களுக்கு தான் அவங்க நடிகை, செலிபிரிட்டி. எனக்கு அவங்க ஒரு பொண்ணு தான். தினமும் காலையில நான் எப்படி ஆபிஸ் போறேனோ, அதே மாதிரி அவங்க ஷூட்டிங் போறாங்க. அவ்வளவு தான். அவங்க பண்ற வேலையை ரொம்ப பிடிச்சு, சந்தோஷமா பண்றாங்க. அதுக்கு மேல என்ன வேணும்” என்று கூலாக பதில் சொன்னவரிடம், ஹனிமூனுக்கு எங்க போறீங்க என்று கேட்டோம்.

“ஆஸ்திரேலியா போகலாம்னு ப்ளான் பண்ணுனோம். ஆனால், அவங்களுக்கு ஷூட் இருக்கு. டைம் கிடைக்கலை. நாலு நாள் தான் ஃப்ரியா இருக்காங்க. அதுனால, மாலத்தீவுக்கு போகலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம்” என்றார் அஜய்.