உன்னிகிருஷ்ணனிடம் ரூ.1½ லட்சம் கொள்ளை!

பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டை தவறாக பயன்படுத்தி ரூ.1½ லட்சம் சுருட்டப்பட்டுள்ளது.

பிரபல சினிமா பின்னணிப்பாடகர் உன்னிகிருஷ்ணன் சென்னை ராயப்பேட்டை ‘வெஸ்ட்காட்’ சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இவரிடம் சர்வதேச அளவில் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு உள்ளது. அந்த கிரெடிட் கார்டை தவறாகப்பயன்படுத்தி யாரோ மர்மநபர்கள் ரூ.1½ லட்சம் பணத்தை சுருட்டிவிட்டனர்.

பணம் எடுக்கப்பட்ட தகவல் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் உன்னிகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அவரது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்க முடியாதபடி காவல் துறையினர்  நடவடிக்கை மேற்கொண்டனர்.

உன்னிகிருஷ்ணனின் கிரெடிட் கார்டில், மொரீசியஸ் நாட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலி கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அண்ணாசாலை குற்றப்பிரிவு காவல்துறை         யினர்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பாடகர் உன்னிகிருஷ்ணனிடம் கருத்து கேட்பதற்காக செல்போனில் நிருபர்கள் தொடர்பு கொண்டனர். ‘வங்கி அதிகாரிகள் வங்கியில் இருந்து குறிப்பிட்ட பணத்தை தருவதாக தெரிவித்துவிட்டனர். வங்கி அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் நான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.’ என்று உன்னிகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்தார்.