சூட்டைத் தணிக்கும் கூரை வண்ணம்

குளிரூட்டும் கருவி இல்லாமலேயே, ஒரு கட்டடத்திற்குள் வெப்பத்தை, 10 டிகிரி செல்ஷியஸ் வரை குறைக்க முடியுமா? முடியும் என்கிறது இஸ்ரேலில் உள்ள, ‘சோல்கோல்டு’ என்ற புதிய வண்ணம் தயாரிக்கும் நிறுவனம். அதுவும் சூரிய ஒளியை வைத்தே இதைச் செய்ய முடியும் என்கிறது சோல்கோல்டு.

எப்படி? வீட்டின் கூரை மேல் சோல்கோல்டு வண்ணத்தை பூசினால் போதும். இந்த வண்ணப் பூச்சில் இரண்டு அடுக்குகள் உள்ளன. மேலே இருக்கும் வண்ண அடுக்கு, சூரிய ஒளியை ஓரளவுக்கு வடிகட்டுகிறது. கட்டடத்தின் கூரையை தொட்டபடி இருக்கும் இரண்டாவது வண்ண அடுக்கு, சூரியக் கதிரில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி, ஒளியாக மாற்றி விடுகிறது.
இதனால், சோல்டுகோல்டு பூசப்பட்ட கூரைக்குக் கீழே உள்ள அறையின் வெப்பம், 10 டிகிரி குறைவாக இருக்கிறது. அது மட்டுமல்ல, அந்த அறைக்கு குளிர்ச்சியூட்ட செலவிடப்படும் மின்சாரத் தேவை, 60 சதவீதம் வரை குறையும் என்கின்றனர் சோல்டுகோல்டின் ஆராய்ச்சியாளர்கள்.
வீட்டில் மட்டுமல்ல, வெப்பத்தைக் கடத்தி தணிக்கும் காற்று இல்லாத விண்வெளி நிலையம் போன்ற இடங்களிலும், சூரியனின் தகிப்பை குறைக்க இந்த புதிய வண்ணம் பயன்படும். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் சோல்டுகோல்டு, கடைகளில் கிடைக்கக்கூடும்.