உணவின்றி காட்டில் மகனுடன் பத்து நாட்கள் சிக்கி கொண்ட பெண்!

காட்டுக்குள் சென்று வெளியே மீண்டும் வர வழித்தெரியாமல் பத்து நாட்கள் அங்கேயே உணவின்றி வெறும் தண்ணீர் மட்டும் குடித்து தாயும், மகனும் உயிர்வாழ்ந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மிச்சலே ஸ்மால் (40), இவர் மகன் டைலன் டீனே (9) இருவரும் Hunter Valley பகுதியில் அமைந்திருக்கும் மவுண்ட் ராயல் தேசிய பூங்காவுக்கு கடந்த 2-ஆம் திகதி சென்றுள்ளனர்.

அது மிகப்பெரிய காட்டு பகுதி என்பதால் வெகுதூரம் உள்ளே சென்ற ஸ்மால் மற்றும் டீனேவுக்கு மீண்டும் வெளியில் வருவதற்கான வழி தெரியவில்லை.

அந்த பகுதியின் கடுமையான வானிலையாலும் கையில் உணவில்லாததாலும் இருவரும் திணறியுள்ளார்கள்.

உலக புகழ்பெற்ற காடுகள் மற்றும் மலைகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்யும் பியர் கிரில்ஸ் என்பவர் குறித்து ஸ்மால் அறிந்திருந்த நிலையில் அவர் காட்டு பகுதிகளில் தண்ணீர் எங்கிருக்கும் என பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளது அவரின் நினைவுக்கு வந்துள்ளது.

அதன்படியே காட்டில் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுப்பிடித்த ஸ்மால் தான் குடித்த நிலையில் மகனுக்கும் கொடுத்துள்ளார்.

இப்படியே இருவரும் பத்து நாட்கள் இருந்துள்ளனர். பின்னர் எப்படியோ சாலை வழியை கண்டுபிடித்து தங்கள் ஊருக்கு ஸ்மால் மற்றும் டீனே ஆகிய இருவரும் பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர்.

பத்து நாட்கள் உணவின்றி தண்ணீர் மட்டும் குடித்து காட்டிலிருந்து தாயும், மகனும் பத்திரமாக மீண்டு வந்திருப்பது வியப்பாக உள்ளதாக Hunter Valley-ன் கண்காணிப்பாளர் ராப் போஸ்ட் கூறியுள்ளார்.