ரசிகர்களுக்கு நாளை 3டி விருந்து அளிக்கும் `2.0′ படக்குழு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பல் உருவாகி வரும் `2.0′ படக்குழுவில் இருந்து ரசிகர்களுக்கு நாளை 3டி சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், 3டி-யில் மேக்கிங் வீடியோ ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அக்‌ஷய் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

`2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபரிலும், டீசர் நவம்பரிலும், டிரைலர் டிசம்பரிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.