சக்தியாக அவதாரம் எடுத்த வரலட்சுமி

பிரியதர்ஷினி நடிப்பில் பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சக்தியாக புதிய அவதாரம் எடுக்கிறார்.

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி எழுதி, இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகி இருந்ததாக முன்னதாக பார்த்திருந்தோம்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு `சக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டது.

`சக்தி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதேபோல் தெலுங்கு போஸ்டரை ராணா டகுபதியும், மலையாள போஸ்டரை துல்கர் சல்மானும் வெளியிட்டனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார்.

பேப்பர் டேல் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

`சக்தி’ படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை பார்த்த நடிகர் சரத்குமார், தனது மகள் வரலட்சுமி மற்றும் படக்குழுவை பாராட்டியிருக்கிறார்.