ரோகித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 296 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா (790 புள்ளிகள்) 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது.

இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கப்டன் விராட்கோலி (877 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 296 ரன்கள் குவித்த இந்திய வீரர் ரோகித் சர்மா (790 புள்ளிகள்) 4 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். இந்திய வீரர் ரஹானே 4 இடங்கள் ஏற்றம் கண்டு 24-வது இடம் பெற்றுள்ளார்.

கேதர் ஜாதவ் 8 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தை எட்டி இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் முதலிடத்தை பிடித்துள்ளார். காயத்தால் ஓய்வு எடுத்து வரும் அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 2-வது இடத்துக்கு சரிந்துள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 3 இடம் முன்னேறி முதல்முறையாக 7-வது இடத்தை பிடித்துள்ளார். யுஸ்வேந்திர சாஹல் 24 இடம் முன்னேறி 75-வது இடத்தையும், குல்தீப் யாதவ் 9 இடம் முன்னேறி 80-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.