சார்ஜ் செய்யும் போது பாதியாக பிளந்து கொண்ட ஐபோன் 8 பிளஸ்

அப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்த போது வெடித்து, பாதியாக பிளந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஐபோன் 8 சீரிஸ் பாதியாக பிளந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8 பிளஸ் ஸ்மாப்ட்போன் பக்கவாட்டுகளில் பிளந்து கொண்டிருப்பது தெளிவாக காட்சியளிக்கிறது.

தாய்வானை சேர்ந்த வாடிக்கையாளர், வாங்கி ஐந்தே நாட்களான தனது ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனினை சார்ஜ் செய்த போது அதிர்ந்து போயிருக்கிறார். ஐபோனுடன் வழங்கப்பட்ட அடாப்டர் மற்றும் கேபிள் கொண்ட் சார்ஜ் செய்த போதும் புத்தம் புதிய ஐபோன் 8 பிளஸ் பிளந்து கொண்டதாக டுவிட்டரில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

தாய்வானை வாடிக்கையாளர் மட்டுமின்றி ஜப்பானை சேர்ந்த வாடிக்கையாளரும், தனக்கு ஐபோன் 8 பிளஸ் ஸ்கிரீன் ஒருபகுதியில் கழன்று போயிருந்ததாக தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்த அவலத்தை டுவிட்டரில் பதிவிட்டதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் பிரச்சனைக்கான காரணத்தை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.

பிழையான பேட்டரிகளே ஸ்மார்ட்போன் பிளந்து போக காரணமாக அமைந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படவில்லை என்றாலும் உண்மையான காரணம் அறியப்படாமல் இருக்கிறது.

செப்டம்பர் 22-ம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 8 விநியோகம் சமீபத்தில் துவங்கியது. பழைய ஐபோன் 7 வடிவமைப்பில் புதிய அம்சங்களுடன் புதிய ஐபோன் 8 வெளியிடப்பட்டது. இந்தியாவில் புதிய ஐபோன் 8 விற்பனை ஆயுத பூஜை தினத்தன்று துவங்கியது.