இந்தியா-அவுஸ்ரேலியா 21-ந்திகதி கொல்கத்தாவில் மோதல்!

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. இப்போட்டி நடைபெறும் 21-ந்திகதி பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் வருகிற 21-ந்திகதி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இதற்காக இந்தியா, அவுஸ்ரேலியா வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தா சென்றடைந்தனர். இன்று முதல் அவர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இதற்கிடையே கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் அங்கு பலத்த மழை பெய்தது. போட்டி நடைபெறும் 21-ந்திகதி பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் கொல்கத்தா ரசிகர்கள் கவலையில் உள்ளனர். கொல்கத்தாவில் கடைசியாக 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதிய 20 ஓவர் போட்டி மழையால் முடிவு கிடைக்காமல் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடந்த முதல் போட்டியில் மழை குறிக்கீடு இருந்தது. அதன்பின் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடந்தது.