பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்: கங்கனா ரணாவத்

பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும், அவர்களது சுதந்திரத்தில் யாரும் குறுக்கிடக்கூடாது என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார்.

இந்தி பட உலகின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது வாழ்க்கை அனுபவம் பற்றி கூறுகிறார்…

“தற்போது ‘சிம்ரன்’ என்ற இந்தி படத்தில் அதே பெயரில் நடிக்கிறேன். பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். யாரும் நமது வாழ்வில் குறுக்கிடக்கூடாது என்பது இந்த படத்தின் நாயகி குணம். உண்மையில் எனது குணமும் இது தான்.

சின்ன வயதில் திருடி இருக்கிறேன். என்னுடைய தாத்தாவிடம் நான் காசு கேட்கும் போது, அவர் மணிபர்சில் இருந்து 10 ரூபாய், எடுத்துக் கொள்ளச் சொல்வார். நான் 50 ரூபாய் எடுப்பேன். சில நேரம் 100 ரூபாய் கூட திருடி இருக்கிறேன்.

எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்வேன், பேசுவேன். கடந்த 11 ஆண்டுகளில் எனது வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு இப்போது சாதித்து இருக்கிறேன். எனது படங்கள் தோல்வி அடைந்தாலும், பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கவலைப்படமாட்டேன். எதிர்கால சினிமா பற்றி எனக்கு கவலை இல்லை.

இந்த சமூகம் எப்போதும் பெண்கள் தான் தவறு செய்வதாக எண்ணுகிறது. அந்த நிலைமாற வேண்டும். திருமணம் செய்யாமல் ஒரு பெண் வெற்றியுடன் வலம் வந்தால் கூட இந்த சமூகம் அவரை அப்படி பார்க்காது. இந்த எண்ணங்களை நாம் மாற்ற வேண்டும். எனக்கு அரசியல் ஆசை இல்லை. எனக்கு பிடித்தது ‘பே‌ஷன்’. நன்றாக பேசுவேன். நல்ல தலைவராக இருக்க முடியும். ஆனால் அரசியல்வாதிகள் அணியும் உடை, வாழ்க்கை முறை எனக்கு சரிப்பட்டு வராது”.