மன்மத நாயகனுடன் மீண்டும் இணையும் ஜோதிகா!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பல படங்களில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக மன்மத நாயகனுடன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி ரிலிசூக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. ‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் அடுத்ததாக மல்டி ஸ்டார்களை வைத்து படம் இயக்க இருக்கிறார். இதில் ஜோதிகா ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்புவும் ஜோதிகாவும் இதற்குமுன் ‘மன்மதன்’ படத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்க இருக்கும் படத்தில் ஜோதிகா, சிம்புவுடன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.