உயிரைக் காக்கும் மருத்துவரையே கொல்வது பெருந்துயர்! – பார்த்திபன்

உயிரைக் காக்கும் மருத்துவரையே கொல்வது பெருந்துயர் என்று மாணவி அனிதா தற்கொலை குறித்து நடிகர் பார்த்திபன் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு பலரும் கண்டனக் குரல்களை பதிவு செய்து வரும் வேளையில் இயக்குநரும், நடிகருமான இரா.பார்த்திபனும் இரங்கலுடன் கண்டனக் குரலும் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அனி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் …
அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும்

இனியும் ஆகும். இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே.

வாழவே துவங்காத ஒரு இளம்பெண் தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன் என்னவெல்லாம் யோசித்திருக்கலாம்? அதில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.

ஏழைகளின் ஓலத்திற்கும் ஒப்பாரிக்கும் ஜி.எஸ்.டி. போட்டு விசும்பலாக்க நடுவன் அரசு நன்கு அறிந்திருக்கிறது தானே… செய்துக்கொண்டால் தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும்?

நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர்.

அம்மருத்துவரையே கொல்வது? பெருந்துயர்! இனி மறு துயர்- மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும். இவ்வாறு கூறியிருக்கிறார்.