புயலுக்குப் பின் மெல்லிய காற்று! – சூர்யாவின் இயக்குனர்

புயலான படங்கள் வெளிவந்து ஓய்ந்த பிறகு மெல்லிய காற்று உங்களை வரவேற்கும் என்று சூர்யா வைத்து தற்போது படம் இயக்கி வரும் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.

‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

சூர்யா இப்படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இடம் பெறும் பாடல் காட்சிக்காக ஐரோப்பாவில் உள்ள குரோட்டியா என்ற இடத்திற்கு படக்குழு சென்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘புயலுக்குப் பின் மெல்லிய காற்று உங்களை வரவேற்கும்’ என்று கூறியிருக்கிறார்.

அதாவது, அஜித்தின் ‘விவேகம்’, விஜய்யின் ‘மெர்சல்’ ஆகிய இரண்டு புயலான படங்கள் வெளிவந்து ஓய்ந்த பிறகு, என்னுடைய ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற மெல்லிய காற்று உங்களை வரவேற்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.