‘ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் மெய்யாக்க வேண்டும்’ – ஏ.ஆர் ரஹ்மான்

விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் மெய்யாக்க வேண்டும் என பேசினார்.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன், நீதானே நீதானே என்ற இரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடந்தது. படக்குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விழா அரங்கில் குவிந்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘மெர்சல்’ படத்தின் நான்கு பாடல்கள் விழா மேடையில் வெளியிடப்பட்டன. மேலும், ஏ.ஆர். ரஹ்மான் லைவ் இசை நிகழ்ச்சியையும் நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “25 ஆண்டுகளான தனது திரைவாழ்க்கையில், இப்போதுள்ள ரசிகர்கள் புது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அதனால் தனக்கு வயது குறைந்து” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகியுள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர். ரகுமானிடம், “ஆளப்போறான் தமிழன் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்று உற்சாகம் பொங்க பேசியுள்ளார்.