மனுஸ் தீவு தடுப்பிலுள்ள அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரியவர்களில் மனுஸ் தீவில் தடுப்பில் உள்ள அகதிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை உத்தியோகப்பூர்வமாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா – அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த தடுப்பு முகாமிலுள்ள அகதிகளை உடனடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதற்கே தமது அரசு விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வருடமொன்றுக்கு உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கை, அரைவாசியாகக் குறைக்கப்பட்டதால், அக்டோபர் வரை காத்திருக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மனுஸ்தீவு தடுப்பு முகாமை மூடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் இறுதியுடன் முழுமையாக மூடப்பட்டுவிடுமெனவும் நவ்ரு முகாம் தொடர்ந்து இயங்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மனுஸ் மற்றும் நவ்ரு தடுப்பு முகாமிலுள்ள சுமார் 1200 பேர், அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் எனத் தாம் நம்புவதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.