அரசியல் களத்தில் இணையும் ரஜினி – கமல்?

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவார்களா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியல் களம் பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னமும் முடங்கிப்போய் கிடக்கிறது. கருணாநிதி வயது மூப்பினால் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டி தமிழக அரசியலை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் தலைவராக யார் வரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர் மனதிலும் கேள்வியாக நிற்கிறது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்று அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். அவரது நட்சத்திர அந்தஸ்து அதற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.

சென்னையில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி, “நான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் இருக்கிறது. ஒருவேளை அரசியலில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்” என்ற அறிவிப்பு வெளியிட்டு அவரது அரசியல் பிரவேசத்தை பரபரப்பான எதிர்பார்ப்பாக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்னொரு திருப்பமாக கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றியும் பேச்சுகள் அடிபட தொடங்கி உள்ளன. முன்பை விட ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் வட்டாரத்தை அவர் பரபரப்பாக்கி வருகிறார். அமைச்சர்கள் எதிர்ப்புகளையும் அவர் பொருட்படுத்தவில்லை.

கமல்ஹாசனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும், திரையுலகினரும் குரல் எழுப்பி வருகிறார்கள். இது கமல்ஹாசனை அரசியலுக்கு இழுக்கும் சூழ்நிலையை உருவாக்கி விட்டுள்ளது என்கின்றனர். தொடரும் சர்ச்சைகள், எதிர்ப்புகள் காரணமாக அரசியலில் ஈடுபடலாமா? என்று அவர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்த விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக டுவிட்டரில் பதிவிட்டு அரசியல் ஏரியாவை கலகலக்க வைத்து இருக்கிறார்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படுவார் என்ற பேச்சும் உள்ளது. இருவரும் சினிமா துறையில் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அபூர்வராகங்கள், 16 வயதினிலே, இளைமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார்கள். தமிழகத்தில் ‘சிஸ்டம்’ கெட்டுப்போய் இருக்கிறது என்று இருவருமே பகிரங்கப்படுத்தி உள்ளனர். எனவே இருவரும் அரசியல் களத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனர். ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே அரசியல் மேடையில் ஏறி பேசுவதை நினைக்கவே இனிமையாக இருக்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அவருக்கு கமல்ஹாசன் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம் அல்லது கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடும் முடிவை கைவிட்டு அவரை வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என்ற கோணத்திலும் விவாதங்கள் நடக்கின்றன.

இருவரும் இணைந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் ஆதரித்தாலும் அது தமிழக அரசியல் களத்தில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் நிகழ்வாகவே இருக்கும் என்று பேசப்படுகிறது.