‘காலா’ படத்துக்காக ரஜினியின் புதிய முயற்சி

பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ படத்துக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினியின் ‘2.0’ படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், அந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘2.0’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா’ குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘காலா’ படத்தின் இந்தி பதிப்பின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் புதிய முயற்சியாக இந்தி பதிப்பிற்கு ரஜினியே ‘டப்பிங்’ பேசுகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.