சிரிய அகதிக்கு ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வழங்கிய வயலின்!

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இசைக் கருவிகளின் தொகுப்பில் இருந்த 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வயலின் ஒன்று அகதியாக வாழ்ந்து வரும் சிரியாவை சேர்ந்த இளம் இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

14 வயதான அபூட் கப்ளோ, அலெப்போவில் இருந்த அவரின் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, தற்போது லெபனானில் வசித்து வருகிறார்.

அபூட்டை சந்தித்த திரைப்பட இயக்குனர் சுசீ அட்வூட் இசையின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையும், அதேசமயம் அவரிடம் இசைக்கருவிகள் இல்லாததையும் அறிந்திருந்தார்.

இந்நிலையில் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது வரலாற்று சிறப்புமிக்க வயலினை அந்த இளைஞருக்கு அனுப்பியுள்ளது.

ஜெர்மன் தயாரிப்பான இந்த வயலின் ஒக்ஸ்போர்டு பலகலைக்கழகத்தின் பேட் இசைக்கருவிகள் தொகுப்பின் ஒரு அங்கமாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான வரலாற்று சிறப்புமிக்க மற்றும் நவீன கால இசைக்கருவிகளை வைத்திருக்கிறது. இவை அந்தக் கருவிகள் எவ்வாறு மத்திய காலத்திலிருந்து வளர்ந்துள்ளன என்பதைக் காட்டும் தொகுப்பாகும்.

பல்கலைக்கழத்தைச் சேர்ந்த கல்வியாளார்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இசைக்கருவிகள் முதன் முறையாக அகதியாக வாழ்ந்து வரும் ஆர்வமிக்க இளம் இசைக்கலைஞருக்கு வழங்கப்படவுள்ளது.

இசைக்கருவிகள் காப்பகத்தின் காப்பாளார் ஆண்டி லேம்ப் இதுகுறித்து தெரிவிக்கையில், ” அந்த இளைஞரின் நிலைமை குறித்து படித்தவுடன் இந்த பேட் தொகுப்பு இவ்விஷயத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பாக இருக்கும் என்று தான் உணர்ந்ததாக தெரிவித்தார்.

” உடனடியாக எனக்கு ஒரு இசைக்கருவி மனதில் தோன்றியது. அந்த இசைக்கருவி முன்னாள் காப்பாளரும் தாராள மனமுடைய, டாக்டர் ஹெலெனெ லாருக்கு சொந்தமானது மேலும், இதே சூழ்நிலையை அவர் எதிர்கொண்டிருந்தாலும், உடனடியாக ஒரு இசைக்கருவியை நன்கொடையாக அளித்திருப்பார்” என்றும் குறிப்பிட்டார்

அபூட் குறித்து திரைப்பட இயக்குனரும் முன்னாள் மாணவருமான சுசீ ஆட்வூட்டிடமிருந்து தான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்தது.

லெபனாலில், சிரிய கிறித்துவ அகதிகள் குறித்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த போதே சிரியாக் மரபுவழி மடாலயத்தை சேர்ந்த அபூட்டின் குடும்பத்தை அவர் சந்தித்துள்ளார். மேலும், அந்த குடும்பம் வேலை தேட இயலாமாலும் முறையான கல்வியினை தனது குழந்தைகளுக்கு அளிக்கமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

‘சிரிய அகதிகளின் அன்றாட வாழ்க்கைநிலை’

இது குறித்து அவர் தெரிவிக்கையில், ” லெபானில் இருக்கும் சிரிய அகதிகளின் அன்றாட வாழ்க்கை மிகவும் கடினமானது, ஆனால் அபூட் போன்ற ஒருவருக்கு இசை அளித்திருக்கும் நம்பிக்கையை காணும் போது சற்று ஆறுதலாக உள்ளது. இதை இப்படியே விட்டுவிட்டு செல்லமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தையும், பேட் இசைக்கருவிகள் காப்பகத்தையும் உடனடியாக அவர் தொடர்பு கொண்டு இந்த சிரிய அகதிக்கு உதவியுள்ளார்.

இது குறித்து இசைக்கருவிகள் தொகுப்பின் காப்பாளர் லேம்ப் மேலும் தெரிவிக்கையில், ” இந்த வயலின் மிகவும் அரிதான ஒரு இசைக் கருவி அல்ல மேலும், விலையுயர்ந்த பொருளாக கருத்தப்படுவதற்கு ஏற்ற பழமையான ஒன்றும் அல்ல. ஆனால், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் நவீன கால கருவிகளைக் காட்டிலும் சிறந்தது. மேலும், ஆக்ஸ்போர்டில் , பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாங்கள் கொடுக்கக்கூடிய ஒரு கருவி போன்றதுதான் இது ” என்று குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து அபூட் தெரிவிக்கையில், தான் உணர்வதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றும் தான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், “வயலினை இசைக்கும் போது, நான் என்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறேன். இசையை முறையாக கற்று உலகம் முழுவதும் சுற்றி மிகப்பெரிய மேடைகளில் இசைக்க வேண்டும் என்றும் அபளெட் தெரிவித்தார்.

_96553615_violin1i