அவுஸ்ரேலிய பக்டீரியா வகையொன்று சிறிலங்காவில் அறிமுகம்!

டெங்குவை கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய பக்டீரியா வகையொன்று சிறிலங்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த வகை பக்டீரியாவை சிறிலங்காவில் அறிமுகம் செய்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த வகை பக்டீரியாவின் ஊடாக டெங்கு நுளம்பின் விசத்தை குறைக்க முடியும் என அவர் கொழும்பு ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

வியட்னாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இந்த பக்டீரியா வகை பரிசோதிக்கப்பட்டுள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்காக இந்த பக்டீரியா பயன்படுத்தப்படுவதாக அவுஸ்ரேலிய மொனொஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த வகை பக்டீரியாவை சிறிலங்காவில் பயன்படுத்துவது குறித்து மொனாஸ் பல்கலைக்கழகம் ஆய்வுகளை நடத்த உள்ளது.

எதிர்வரும் மாதம் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது குறித்த வகை பக்டீரியா தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு நோயினால் இதுவரையில் இந்த ஆண்டில் 150 பேர் உயிரிழந்திருப்பதுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு நிறைவிற்குள் மேலும் பலர் டெங்குவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.