வீடு கட்ட உதவும் ரோபோக்கள்!

கட்டுமானத் துறையில் நாளொருவண்ணம் பொழுதொருமேனியாகப் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன. கட்டுமான புதிய இயந்திரங்கள் இந்த வகையில் ஏராளமாக வந்துவிட்டன. இந்த இயந்திரங்கள் கட்டுமானப் பணிகளை எளிமையாகவும் விரைவாகவும் முடிக்க உதவி வருகின்றன. இயந்திரங்களுக்குப் போட்டியாக கட்டுமானத் துறையில் ரோபோக்களும் அறிமுகமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கட்டுமானத் துறையில் ரோபோக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

மனிதர்கள் செய்யும் வேலைகளை ரோபோக்களை வைத்துச் செய்து முடிக்கும் தொழில்நுட்பங்கள் என்றோ வந்துவிட்டன. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் பலவிதமான வேலைகளைச் செய்துமுடிக்க ரோபோக்கள் நிறைய உள்ளன. சாதாரண வேலைகளையே ரோபோக்களைக் கொண்டு செய்யும் விஞ்ஞானிகள், மனித உழைப்பு அதிகம் தேவைப்படும் கட்டுமானத் துறையை விட்டு வைப்பார்களா? கட்டுமானத் துறையிலும் ரோபோக்கள் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.

பல்லடுக்கு மாடி வீடுகள், பிரம்மாண்டமான வணிக வளாகங்கள் போன்றவற்றைக் கட்டி முடிக்க மனித வளம் அதிகளவில் தேவைப்படும். இத்தகைய கட்டுமானப் பணிகளுக்காகத்தான் ரோபோக்கள் அறிமுகமாயின. இந்தக் கட்டுமானங்களுக்கு முதலில் மிகப் பிரம்மாண்டமான அஸ்திவாரம் இட வேண்டியிருக்கும். அதற்காக நிலத்தைப் பெரிய அளவில் தோண்ட வேண்டியிருக்கும். இந்தப் பணிகளுக்கான நாட்களும் அதிகம் பிடிக்கும். மனித உழைப்பும் அதிகம் தேவைப்படும். முதன் முதலில் வெளிநாடுகளில் பள்ளம் தோண்டுவதற்காகத்தான் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மற்ற கட்டுமானப் பணிகளிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன. தற்போது வெளிநாடுகளில் கட்டுமானப் பணிகளில் ரோபோக்களின் தேவை அவசியமானதாக மாறிவிட்டது.

பழைய கட்டுமானத்தை இடித்துப் புதிய கட்டுமானம் கட்டும் இடங்களிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. உயரமான இடங்களில் செய்யப்படும் பணிகளையும் ரோபோக்களே செய்கின்றன. அதிகப் பரப்பில் அமைக்க வேண்டிய கான்கிரீட் பணிகள், அதிக எடைகளை கையாள வேண்டியிருக்கும் கட்டுமானப் பணிகளிலும் ரோபோக்களே பயன்படுத்தப்படுகின்றன. இப்படி கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுமானத் துறையில் ரோபோக்களின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெரிய கட்டுமானப் பணிகளைக் குறிப்பிட்ட நாட்களில் முடிக்க ரோபோக்கள் மிகவும் உதவிக்கரமாக இருப்பதால் இதற்கு முக்கியத்துவமும் கூடியுள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் பெரிய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய 5 முதல் 6 ஆண்டுகள் வரை ஆயின. கட்டுமானம் முழுவதும் மனித உழைப்பினால் உருவாக்கப்பட்டதால் இத்தனைக் காலங்கள் பிடித்தன. செலவுகளும் அதிகமாக ஏற்பட்டன. ஆனால், இப்போது பெரிய கட்டுமானப் பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடித்துவிடுகிறார்கள். அதற்கு ஒரு புறம் கட்டுமானத் துறைக்கு வந்த புதிய இயந்திரங்களும் ரோபோக்களும் ஒர்ரு காரணம். இவற்றின் வருகை காரணமாக மனித உழைப்பின் பங்களிப்பை இப்போது குறைத்துவிட்டது. மேலும் கட்டுமானப் பகுதியில் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகள் இதில் இல்லையென்பதாலும் பெரிய கட்டுமன நிறுவனங்கள் ரோபோக்களையே அதிகம் விரும்புகின்றன.

வெளிநாடுகளில் கட்டுமானத் துறையில் இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் வருகை பெரிய வரவேற்பைப் பெற்றாலும், அவை மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் வேலையிழப்பும் சிக்கலை ஏற்படுத்தவும் செய்கின்றன.

புது ரோபோ வருகை

அண்மையில் அமெரிக்காவிலுள்ள எம்.ஐ.டி. ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். யார் உதவியும் இல்லாமல் ஒரு முழு வீட்டைக் கட்டும் திறனுள்ள ரோபோ இது. ‘டிஜிட்டல் கன்ஸ்ட்ரக்ஷன் பிளாட்ஃபார்ம்’ என்றழைக்கப்படும் இந்த ரோபோ, சக்கரங்களைப் பயன்படுத்தி நகர்கிறது. இந்த ரோபோவில் இணைக்கப்பட்டுள்ள நீண்ட உலோகக் கரம், எல்லா திசைகளிலும் திரும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உலோகக் கரத்தின் நுனியில் தேவைக்கேற்ப கருவிகளை இணைக்கலாம். இது சிமென்ட், மணல், மர பொருட்கள் எனப் பலவிதமான கட்டிடப் பொருட்களையும் கையாள்கிறது.

கட்டிடத்திற்கான வரைப்படத்தை வைத்து, அவற்றுக்கு வேண்டிய பொருட்களை இந்த ரோபோ வாகனத்தில் வைத்துவிட்டால்போதும். ரோபோவே இரவு பகல் பாராமல் உழைத்து முழு வீட்டையும் கட்டித் தந்துவிடுகிறது.