சுமந்திரன் மக்களின் பிரச்சனை தொடர்பாக கதைப்பதில்லை!

அண்மையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்தபோது அவருடன் ஒன்றாக உலங்குவானூர்தியில் பறந்து இடங்களைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எதுவும் கதைப்பதில்லையென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாறாக எம்.ஏ.சுமந்திரன் சிறிலங்காப் பிரதமருக்குத் தனது உறவினர்களையே அறிமுகம் செய்துவைத்தார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்தில் குடியேற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அம்மக்களைச் சந்தித்தபோது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “தமது பூர்வீக மண்ணில் குடியேறுவதற்காக மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடுகின்றனர். இவ்வாறு மக்கள் போராட்டத்தினால் தமது உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை.

இந்த நிலையில் மக்கள் வீதியில் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் நாட்டின் பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது வீட்டிற்கு அழைத்து சென்று உறவினர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இருவரும் ஒரே வானூர்தியில் பயணித்துள்ளனர். இவ்வாறு மிக நெருக்கமான உறவை வைத்திருக்கும் அவர்கள் மக்களிற்காக எதையும் பேசியதாக தெரியவில்லை. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது மகளின் பிறந்த நாளிற்கு ஜனாதிபதியை அழைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறு மக்களை வீதிகளிற்கு கொண்டுவந்த அரச தலைவர்களுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பவர்கள், வீதிகளில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை என்றும் சிந்தித்தது கிடையாது. இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வெறுமனே மக்களின் வாக்குகளிற்காக அவர்களின் வீடுகளிற்கு செல்பவர்கள், பின்னர் மக்களை மறந்து தமது நெருக்கமான உறவை அரச தலைவர்களுடன் கொண்டுள்ளனர். உண்மையை மக்கள் உணர்ந்து எதிர்வரும் காலங்களில் செயற்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.