தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வலியுறுத்தி இப்போராட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடைபெறவுள்ளது.

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்தில் வடக்கு- கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினர், காணாமல் போனோர்கள், தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோரின் உறவினர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டளர் அருட்தந்தை மா.சக்திவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே அறவழிப் போட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.