அன்னையர் தினம்- அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது!

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.

அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

அம்மாவுக்கு அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்கு சென்று, குடும்ப பாரத்தை பகிர்ந்து, கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அமைதியாக அன்புடன் சிரித்து நடந்து கொள்ளும் பாங்கு. இத்தனையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.

பரிசு கொடுங்கள்…

அந்த அன்னையைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று அன்னையர் தினம். இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை குளிர்விக்க, ஆச்சரியப்படுத்த, அன்று ஒரு நாளாவது அவளை அமர வைத்து ஓய்வு கொடுத்து, பரிசுகள் கொடுத்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் வாசித்து, அவளுடன் பொழுதை போக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

சரி. இனி அன்னையர் தினம் எப்படி பிறந்தது என்று பார்ப்போம்.

அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக ”மதர்ஸ் டே ஒர்க் கிளப்” என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, பேணி காத்தல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்.

ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக் கிழமை பள்ளியில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் ”அன்னையர் தினம்” வரும் என்று பாடி இருந்தது அவரது காதுகளிலும், நினைவிலும் வந்து வந்து சென்றது.

இந்நிலையில் அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்துவிட, அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ஆண்ட்ரூஸ் சர்ச்சுக்கு, 1908, மே 10ஆம் தேதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார். அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார்.

அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28வது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9 ஆம் தேதி கையெழுத்திட்டார். இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 2வது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.

அப்படி பிறந்ததுதான் அன்னையர் தினம். இன்றைய தினத்தில் உங்களது அன்னைக்கு பரிசு கொடுத்து மகிழ்ச்சியை பகிருங்கள்

அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் மே 2 ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடினாலும், பிரிட்டனில் ஈஸ்டர் திருநாளில் இருந்து மூன்று வராங்களுக்கு முன்பு வரும் ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுகின்றனர்.