விஜய்யின் அடுத்த படத்தில் சாய் பல்லவி

விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி தற்போது தில் ராஜு புரொக்‌ஷன்ஸ் சார்பில் நானி ஜோடியாக ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான `காற்று வெளியிடை’ படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்திருந்த சாய் பல்லவி, அடுத்ததாக விக்ரமின் `ஸ்கெட்ச்’ படத்திலும் நடிக்காமல் அதனை தட்டிக்கழித்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற `சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கவிருந்தார்.

இந்நிலையில், அதற்கு முன்னதாக பெண்களை மையக்கருவாக கொண்ட கதை ஒன்றை விஜய் இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திலும் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.