ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கும் அட்லி

அட்லி ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லி தயாரிப்பில் முதன்முதலாக உருவாகியுள்ள ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படத்தின் பாடல்கள் இன்று சென்னையில் வெளியிடப்படவிருக்கிறது. இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிடவுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, கோவை சரளா, சூரி, தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஐக் என்பவர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், சங்கிலி புங்கிலி கதவத்தொற ஆடியோ ரிலீசுக்கு முன்னதாக அட்லி திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் தன்னுடைய தயாரிப்பில் உருவாகவிருக்கும் மேலும் 2 படங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, ஒரு படத்தை அட்லியின் நண்பரும், எழுத்தாளர் பாலகுமாரனின் மகனுமான சூர்யா பாலகுமாரன் இயக்குகிறார். இப்படத்தில் நிவின்பாலி ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு படத்தை அட்லியின் உதவியாளர் அசோக் இயக்கவிருக்கிறார். இப்படங்களின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஜுன் மாதத்திற்குள் அவர்களை தேர்வு செய்துவிட்டு, அந்த மாதத்திலேயே படப்பிடிப்பையும் தொடங்கவிருக்கிறார்களாம்.

அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ படம் மே 19-ந் திகதி வெளியாகவிருக்கிறது. அட்லி இயக்கிவரும் விஜய்-61 தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.