பெற்ற வயிறு கலங்கியது: தனுஷ் அம்மா

தனுஷ் தங்கள் மகன் என சொந்தம் கொண்டாடிய விஷயத்தை என்னிடம் யாராவது கேட்கும் போது அதிக வலியை சுமந்தேன் என்று தனுஷின் அம்மா விஜயலட்சுமி கூறினார்.

நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்றும் கடந்த 2002ஆம் ஆண்டு அவர் தங்களை விட்டு பிரிந்து சென்றதாகவும் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று(21) உத்தரவிட்டது.

இதுபற்றி நடிகர் தனுஷின் அம்மா, விஜயலட்சுமி கூறும்போது, ‘என் பிள்ளையை வேறொருவர் சொந்தம் கொண்டாடுவது எனக்கு எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும்? அந்த வலியை நான் கடந்த எட்டு மாதமாகச் சுமந்தேன். என் மகன் தனுஷ் பிறந்த சென்னை எழும்பூர் மருத்துவமனை டாக்டர், விஷயம் கேள்விபட்டு, நான் வந்து சாட்சி சொல்கிறேன் என்றார். இந்த விஷயத்தைப் பற்றி சிலர் கேட்கும்போது பெற்ற வயிறு கலங்கும். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். இன்று உண்மை ஜெயித்துவிட்டது’ என்றார்.