சர்க்கரை அளவை கண்காணிக்கும் சென்சார் கருவி

மனித உடலில் சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய சென்சார் கருவியை தயாரிக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனம் புதிது புதிதாக தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது.

மின்சக்தியின் தேவை அதிகரிப்பால் அப்பிள் மரபுசாரா ஆற்றல் மூலங்களை வைத்து தனது நிறுவனத்தை கலிபோர்னியாவில் அமைத்து வருகிறது.

இந்நிலையில், சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய சென்சார் கருவியை தயாரிக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அப்பிள் நிறுவனம் இதற்காக பயோ மெடிக்கல் பொறியியல் வல்லுநர்களை கொண்ட புதிய குழுவை பணிக்கு அமர்த்தியுள்ளது. இவர்கள் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பலோ அல்டோ அலுவலகங்கள் பணி செய்து வருகிறார்கள்.

ரத்தத்தில் குளுகோஸ் அளவை அறிவிக்கும் சென்சார்களை பயன்படுத்துவதன் மூலம், இன்சுலின் அளவை கண்காணித்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய இன்சுலின் கருவியிலிருந்து தேவைப்பட்ட இன்சுலினை ரத்தத்தில் கலக்கச் செய்தல் சாத்தியமாகக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தயாரிப்பு வெற்றிகரமான உருவாக்கப்பட்டால் அதன் மூலம் லட்சக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.