சத்யராஜ் நடித்திருப்பதால் `பாகுபலி 2′ படத்திற்கு கர்நாடகாவில் தடை?

பாகுபலி 2′ படத்திற்கு தடைக்கோரி கர்நாடகாவில் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

`பாகுபலி 2′ படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதால் அப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஸ்வாரஸ்ய தகவல் வந்து  கொண்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றான `பாகுபலி 2′ இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 28-ஆம்  தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதில் புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது.

 அது என்னவென்றால், கர்நாடகாவில் படத்தை ரிலீஸ் செய்ய தடை கேட்டு கர்நாடக ஆதரவு அமைப்புகள் போராட்டம் நடத்தி  வருகின்றன. `பாகுபலி’ படத்தின் இருபாகத்திலும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது நாம் அறிந்ததே. கட்டப்பா ஏன்  பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு அதன் அடுத்த பாகமான `பாகுபலி 2′-ல் தான் விடை இருக்கிறது. இந்நிலையில், படத்தில்  சத்யராஜ் நடத்திருக்கும் ஒரே காரணத்தால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக எதிர்ப்புக் குழுவினர் தொடர்ந்து  போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்காக கர்நாடக திரைப்படக் குழுவின் தலைவர் கோவிந்துவை சந்தித்த அவர்கள் தங்களது  கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான தண்ணீர் பிரச்சனையின் போது, நடிகர் சத்யராஜ் கர்நாடகத்திற்கு எதிராக பேசியதால், சத்யராஜ்  மன்னிப்பு கேட்கும் வரை படத்தை திரையிடக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், `பாகுபலி’ படத்தின் முதல் பாகத்திற்கு தடை விதிக்க கோராத அவர்கள், அதன் அடுத்த பாகமான  `பாகுபலி 2′ படத்திற்கு தடை கேட்பது வேடிக்கையாக உள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள `பாகுபலி 2′ படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.