‘நந்திக்கடலுக்கான பாதை’ போர்க்குற்றத்தை நிரூபிக்கின்றது!

சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் ‘நந்திக்கடலுக்கான பாதை’ சிறிலங்காப் படைகளுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடாத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கெதிரான வன்முறைகள் எவ்வாறு சிறிலங்காப் படைகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அந்நூலில் குறிப்பிட்டுள்ள விடயங்களைச் சுட்டிக்காட்டிய அவர் படையினர் தமது சகாக்களின் கொலைகளுக்கு பழிவாங்கும் வகையில் பொதுச் சொத்துக்களை அழித்ததாகவும், அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதது அவமானமாக இருப்பதாகவும் கமல் குணரத்ன குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள்மீதே நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் கோரி வருவதாகவும், குற்றமிழைத்தவர்களை தண்டிப்பது தவறல்ல எனவும் தெரிவித்துள்ளார்.