சந்திரயான்-1 விண்கலத்தை நாசா கண்டுபிடித்தது

தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு செயற்கைக் கோளான சந்திரயான்-1 விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது.

இந்திய விண்வெளித் துறையில் ஒரு கனவுத்திட்டம் சந்திரயான்-1. நிலவை ஆராய்வதற்கு சந்திரயான்-1 விண்கலம், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது.

ஆனால் ஓராண்டுக்குள், அதாவது 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் சந்திரயான்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இழந்து விட்டது.

இந்த நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை, அது இப்போதும் சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருந்தாலும், அதனால் பூமிக்கு தரவுகளை அனுப்பவோ, பூமியில் இருந்து தரவுகளைப் பெறவோ முடியாது. எனவே, விண்வெளி குப்பையாகவே கருதப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திரயான்-1 தனது பணியை முடித்துவிட்ட நிலையில், இரண்டாவது நிலவுப் பயணத்திட்டமான சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.