மீண்டும் களத்தில் இறங்கும் நோக்கியா 3310

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் களமிறங்க இருப்பதாக கூறப்படும் நோக்கியா 3310 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கான்செப்ட் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அவ்வப்போது இணையத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்கள் இப்படித் தான் இருக்கும் என்ற வகையில் ஸ்மார்ட்போன்கள் லீக் ஆகின.
அப்படியாக சில தினங்களுக்கு முன் நோக்கியா 3310 பீச்சர்போன் மீண்டும் வெளியிடப்படலாம் என்ற தகவல் வெளியானது. 2000 ஆம் ஆண்டில் நோக்கியா வெளியிட்ட 3310 உலக சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. செங்கல் போன் என அழைக்கப்பட்ட இந்த பீச்சர்போன் தற்போதைய இண்டர்நெட் டிரென்ட் ஆகியுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் நோக்கியா 3310 கான்செப்ட் காணொளி ஒன்று இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழைய நோக்கியா 3310 போன்றே புதிய ஸ்மார்ட்போனும் காட்சியளிக்கிறது. முன்பக்கம் பழைய வடிவமைப்பு அப்படியே வழங்கப்பட்டுள்ளது தற்சமயம் பதிவு செய்யப்பட்டுள்ள கான்செப்ட் காணொளி மூலம் தெரியவந்துள்ளது. பின்புறம் பிரைமரி கமரா ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை யுஎஸ்பி, 3.5 எம்எம் ஜாக், 41 எம்பி பிரைமரி கேமரா இடம்பெறும் என தெரிகிறது. இத்துடன் பட்ஜெட் ரக அம்சங்களும் அனைவரும் வாங்க கூடிய விலையில் 3310 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் எச்எம்டி குளோபல் நோக்கியா 3310 பீச்சர்போனினை மட்டும் வெளியிடும் என கூறப்பட்டது. இதை தவிர நோக்கியா 5, நோக்கியா 3 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்றும் கூறப்பட்டது. இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நோக்கியா 3310 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருக்கும் வீடியோவை கீழே பார்க்கலாம்,