விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு

விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் திடீர் முடிவு எடுத்துள்ளார்.

‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதேநேரத்தில் பல வெற்றி இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இந்நிலையில், தற்போது சி.வி.குமார் இயக்குனராகவும் மாறியுள்ளார். ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி வரும் சி.வி.குமார் தமிழகத்தில் விவசாயிகள் படும் கடும் துன்பங்களை கண்டு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது, விவாசயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இனி அயல்நாட்டு குளிர்பானங்களை இவரும், இவர் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

இதுதான் நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் காப்பதற்காக நாம் ஆற்றும் கடமை என்று குறிப்பிட்டுள்ள சி.வி.குமார், இவருடைய இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இவருடைய தயாரிப்பில் ‘அதேகண்கள்’  என்ற படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.