ஒட்டாவா பிரகடனத்தில் ஒப்பமா? முடியாது என்கிறது சிறீ. இராணுவம்!

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒட்டாவா என அழைக்கப்படும், அனைத்துலக ரீதியில் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் இதுவரை 160 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

இருப்பினும், இதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, ‘இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும்.

அத்துடன், இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடாமைக்கும் நல்லிணக்கத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.