வினோத் – கார்த்தி- ‘தீரன் அதிகாரம் ஒன்று’

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாக்யுள்ளார்.

‘மாயா’ ஒளிப்பதிவாளர் சத்யா ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார். இப்படத்துக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என படக்குழு தலைப்பிட்டு இருக்கிறது. இப்பட தலைப்பினைப் பார்க்கும் போது தொடர்ச்சியாக அடுத்த பாகங்களை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

‘சிறுத்தை’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கவுள்ளார். ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.